தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்., - எம்.பி., ராகுலின் யாத்திரைக்கு... பெயர் மாற்றம்!'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யாம்

காங்., - எம்.பி., ராகுலின் யாத்திரைக்கு... பெயர் மாற்றம்!'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யாம்

காங்., - எம்.பி., ராகுலின் யாத்திரைக்கு... பெயர் மாற்றம்!'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யாம்


ADDED : ஜன 05, 2024 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி வரும் 14ல் மணிப்பூரில் துவங்கி, மார்ச் 21ல் மும்பையில் நிறைவடைய இருக்கும் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தலைமையிலான யாத்திரைக்கு, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'மொத்தம், 15 மாநிலங்களில், 100 லோக்சபா தொகுதிகள் வழியாக நடத்தப்பட உள்ள இந்த யாத்திரை, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும்' என, காங்., தலைமை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

காங்., முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான ராகுல் தலைமையில், 'பாரத் ஒற்றுமை யாத்திரை' கடந்த 2022 செப்., 7ல், தமிழகத்தின் கன்னியாகுமரியில் துவங்கியது.

மொத்தம், 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில், 75 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த யாத்திரை பெரும்பாலும் நடைபயணமாகவே நடத்தப்பட்டது.

இந்த யாத்திரையின் போது, 12 பொதுக்கூட்டங்கள், 100 தெருமுனைக் கூட்டங்கள், 13 செய்தியாளர்கள் சந்திப்புகளை ராகுல் நடத்தினார். அதோடு நடைபயணத்தின் போது, 275 திட்டமிடப்பட்ட உரையாடல்கள், 100 பேட்டிகளை அளித்தார்.

வலியுறுத்தல்


இந்த, 'பாரத் ஒற்றுமை யாத்திரை' காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்ததாக அக்கட்சி கருதியது. இதன் பலனாகவே ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் ஆட்சியை கைப்பற்ற முடிந்ததாக அக்கட்சி உறுதியாக நம்புகிறது.

இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரை ராகுல் தலைமையில் மற்றொரு யாத்திரை நடத்த காங்., தலைமை முடிவு செய்தது. அதற்கு, 'பாரத் நியாய யாத்திரை' என, பெயரிடப்பட்டது.

இந்த யாத்திரை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், புதுடில்லியில் உள்ள காங்., தலைமையகத்தில் நேற்று மூன்று மணி நேரம் நடந்தது.

அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ராகுல் உட்பட, கட்சியின் பொது செயலர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள், காங்., சட்டசபை கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

'பாரத் நியாய யாத்திரை' என்ற பெயரை, 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை' என, மாற்றம் செய்யும்படி பெரும்பாலான தலைவர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் வரும் 14ல் துவங்கி, மஹாராஷ்டிராவின் மும்பையில் மார்ச் 20 அல்லது 21ல் இந்த யாத்திரை நிறைவடையும்.

யாத்திரைக்கான வழித்தடத்தில் அருணாச்சல பிரதேசம் முதலில் இடம் பெறவில்லை. தற்போது அதையும் சேர்த்து மொத்தம் 15 மாநிலங்களை உள்ளடக்க முடிவு செய்துள்ளோம்.

மொத்தம், 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 லோக்சபா தொகுதிகள், 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய 6,713 கி.மீ., துாரத்தை, 66 நாட்களில் நடைபயணம் மற்றும் பஸ் பயணம் வாயிலாக கடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அழைப்பு


இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில், 1,074 கி.மீ., துாரத்தை கடக்க 11 நாட்கள் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட, 'பாரத் ஒற்றுமை யாத்திரை' ஏற்படுத்திய தாக்கத்தையும், மாற்றத்தையும், 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யும் ஏற்படுத்தும் என, உறுதியாக நம்புகிறோம்.

இந்த யாத்திரையில், 'இண்டியா' கூட்டணி கட்சி உறுப்பினர்களும் ஆங்காங்கே இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'இஷ்டத்திற்கு எதையாவது பேசக்கூடாது'

ஆலோசனை கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் தமிழக காங்., தலைவர் அழகிரி கூறியதாவது:ராகுல் தலைமையிலான யாத்திரை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், அவரது பயணத்திற்கான ஏற்பாடுகளை தயார் செய்வது குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் செலவுக்கான நிதி பெருமளவில் தேவைப்படுறது. நிதி திரட்டுவதற்கு தேவையான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.பொதுமக்களை எவ்வாறு சந்திப்பது, கொள்கையை திரிபு இன்றி எப்படி அவர்களிடம் சொல்வது, அதற்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் எவ்வாறு தயார் ஆவது என்பதற்கெல்லாம், அறிவுரைகள் வழங்கப்பட்டன.மேலும், கட்சி என்ன முடிவு செய்திருக்கிறதோ, அதை மட்டுமே வெளியில் பேச வேண்டும். ஊடகங்களுக்கும் செய்திகளாக தரவேண்டும். மற்றபடி, அவரவர் சொந்தக் கருத்துகளை எல்லாம் பேசக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.மற்றபடி, அனைவரும் எதிர்பார்ப்பது போல, தொகுதிப் பங்கீடு குறித்தெல்லாம் எந்த ஒரு விஷயமும் இறுதி செய்யப்படவில்லை. அது குறித்த பேச்சே, இந்த கூட்டத்தில் எழுப்பப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us