தொகுதிக்கு நிதி ஒதுக்குங்கள் காங்., - எம். எல்.ஏ., அதிருப்தி
தொகுதிக்கு நிதி ஒதுக்குங்கள் காங்., - எம். எல்.ஏ., அதிருப்தி
ADDED : நவ 20, 2024 12:23 AM

விஜயநகரா; ''எனது தொகுதிக்கு நிதி ஒதுக்காததால், மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை,'' என, விஜயநகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ., கவியப்பா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
விஜயநகராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ், ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை எனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடியவில்லை. 'உங்கள் அரசு வந்து இரண்டு ஆண்டு ஆகப்போகிறது. தொகுதிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்' என்று மக்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். அவர்களுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பொறுமையாக இருந்து விட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் பொறுமை காக்க வேண்டும் என்று தெரியவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் கொண்டு வந்த நிதியில் தான் தற்போது வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
மாவட்டத்தில் இருந்து அரசுக்கு கிடைக்கும் நிதியிலிருந்து 25 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜமீர் அகமது கான், எனது தொகுதிக்கு நிதி வாங்கி தர எந்த முயற்சியும் செய்யவில்லை. தயவுசெய்து எனது தொகுதிக்கு அரசு விரைவில் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

