மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது காங்.,
மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தனித்து போட்டியிடுகிறது காங்.,
ADDED : ஜன 20, 2026 06:36 AM

மும்பை: மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்த காங்., வரவிருக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில், மும்பை உட்பட, 29 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில், ஆளும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மூன்றாவது இடத்தை காங்., பிடித்தது. மும்பையை மஹாயுதி கூட்டணி கைப்பற்றினாலும், மேயர் பதவியை பிடிப்பதில், பா.ஜ., - துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ராய்கட், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, சதாரா, சாங்லி, கோலாப்பூர், சோலாப்பூர், சத்ரபதி சம்பாஜி நகர், தாராஷிவ், லாத்துார், பர்பானி ஆகிய 12 மாவட்டங்களில், அடுத்த மாதம் 5ல், மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் நடக்கிறது. 7ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. மேலும், 125 பஞ்சாயத்து குழுக்களுக்கும் தேர்தல் நடக்கிறது.
மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பிடித்ததால், நம்பிக்கையில் உள்ள காங்., வரவிருக்கும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
மஹாயுதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் துணை முதல்வர் அஜித் பவாருடன் சரத் பவார் கூட்டணி வைத்ததால், அவருடன் கூட்டணி வைக்க காங்., விரும்பவில்லை. அதே சமயம், உத்தவ் சிவசேனா, வஞ்சித் பகுஜன் ஆகாடி ஆகிய கட்சிகளுடன் அக்கட்சி மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

