காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் சிறை தண்டனை நிறுத்திவைப்பு
காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைல் சிறை தண்டனை நிறுத்திவைப்பு
ADDED : டிச 23, 2024 06:59 AM

பெங்களூரு: தாதுமணல் கடத்தல் வழக்கில், கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு விதிக்கப்பட்ட, ஏழு ஆண்டு சிறை தண்டனையை, உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
பல்லாரி மாவட்டத்தின் வனப்பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, தாதுமணலை வனத்துறையினர் பறிமுதல் செய்து, கார்வார் பெலகேரி துறைமுகத்தில் வைத்து இருந்தனர்.
அந்த தாதுமணலை கப்பல் மூலம் கடத்திய வழக்கில், கார்வார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 27ம் தேதி தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், சதீஷ் சைல் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சதீஷ் சைலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
'இந்த மனு மீது இறுதித் தீர்ப்பு வரும் வரை, மனுதாரர் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது. தொகுதிக்கு, அரசிடம் இருந்து நிதி உதவி பெற தகுதி இல்லை. கார்வார் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த கூடாது' என்றும் நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்தார்.

