கர்நாடகா தலைவர்களே தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ; முதல்வர் பதவி விவகாரத்தில் கார்கே நழுவல்
கர்நாடகா தலைவர்களே தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் ; முதல்வர் பதவி விவகாரத்தில் கார்கே நழுவல்
ADDED : டிச 21, 2025 03:28 PM

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் பதவி விவகாரத்தில், மாநில காங்கிரஸ் தலைவர்களே தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே, முதல்வர் இருக்கைக்கான போட்டி நீடித்து வருகிறது. இது கர்நாடக காங்கிரஸ் அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிடம் வரை சென்றுள்ளது. இதில், என்ன முடிவை எடுப்பது என்று தெரியாமல் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் உள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் விவகாரத்தில் மாநில தலைவர்களே பேசி தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை காங்கிரஸ் மேலிடம் உருவாக்கவில்லை. மாநில தலைவர்களே உருவாக்கிக் கொண்டனர். எனவே, அவர்களே இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் மேலிடத்தையே சொல்லக் கூடாது. காங்கிரஸ் ஒரு தலைவரால் மட்டும் வளரவில்லை. எனவே, யாரும் நான் அதிகாரத்திற்கு வந்தேன், நான் கட்சியை உருவாக்கினேன் என்று சொல்லக்கூடாது.
காங்கிரஸ் என்பது தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி. கட்சியின் கெளரவத்தில் அனைவருக்கும் பங்கு உண்டு. தொண்டர்கள் கூட ஒருவரை மட்டுமே நம்பி கட்சி இருக்கிறது என்று சொல்லக்கூடாது, எனக் கூறினார்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து அவர் பேசுகையில், 'பாஜ அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. ஏழை மக்களை வஞ்சிக்கிறது,' என்றார்.

