ADDED : மே 21, 2025 03:27 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில் மர்ம நபர்கள், தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து, அடுத்தடுத்து இரண்டு ரயில்களை கவிழ்க்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ரூகர் நோக்கி, ராஜ்தானி விரைவு ரயில் நேற்று முன்தினம் சென்றது.
உத்தர பிரதேசத்தில் ஹார்தோய் மாவட்டத்தின் தாலேல் நகர் மற்றும் உமர்தாலி ரயில் நிலையங்களை அந்த ரயில் கடக்க முயன்றபோது, தண்டவாளத்தில் மரக்கட்டைகளை மர்ம நபர்கள் வைத்திருப்பதை பார்த்த ரயில் டிரைவர், உடனே ரயிலை நிறுத்தினார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. தண்டவாளத்தில் இருந்து மரக்கட்டைகளை அகற்றிய பின், ரயில் புறப்பட்டு சென்றது.
இதைத்தொடர்ந்து அந்த வழியாக, உத்தராகண்டின் கத்கோடத்தில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோ நோக்கி சென்ற விரைவு ரயிலை கவிழ்க்கும் நோக்கில், மர்ம நபர்கள் அந்த ரயில் செல்லும் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்திருந்தனர்.
இதைப் பார்த்த விரைவு ரயிலின் டிரைவர், உடனே ரயிலை நிறுத்தினார்.
இதனால் விபத்து நிகழாமல் தடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.