கட்சி தலைமை சொல்லும் வரை நானே முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
கட்சி தலைமை சொல்லும் வரை நானே முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
ADDED : டிச 19, 2025 04:12 PM

பெங்களூரு: நான் முதல்வராகவே தொடருவேன் என்று சித்தராமையா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வராக அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உள்ளார். தேர்தலில் காங்கிரஸ் வென்று அரியணையை பிடித்த போது இரண்டரை ஆண்டுகள் முதல்வராக சித்தராமையாவும், அதன் பின்னர் தற்போது துணை முதல்வராக உள்ள சிவகுமார் முதல்வராக தொடர வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது, முதல்வராக இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா கடந்துவிட்டதால், தமக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று சிவகுமார் போர்க்கொடி உயர்த்தினார். இவர்கள் இருவரும் நடவடிக்கையில் கடும் அதிருப்தியுற்ற காங்கிரஸ் தலைமை இருவரையும் டில்லி அழைத்து பேசியது.
இதையடுத்து, இருவரும் பரஸ்பரம் உணவு விருந்தளித்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த, அப்போது இவர்களின் கருத்து முரண் ஓய்ந்தது. இந் நிலையில் நான் முதல்வராகவே தொடருவேன் என்று சித்தராமையா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் பதவிக்கு இரண்டரை ஆண்டுகள் ஒப்பந்தம் பற்றி, எம்எல்ஏ அசோகா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சித்தராமையா இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது;
முதல்வராக இரண்டரை ஆண்டுகால ஏற்பாடு என்று ஒருபோதும் எந்த முடிவும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். அதுவரை நான் முதல்வராகவே தொடருவேன். இப்போதும் நான்தான் முதல்வர்.
இரண்டரை ஆண்டுகள் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அதுபோன்ற ஒப்பந்தம் எதுவும் இல்லை.
இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.

