திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
ADDED : அக் 04, 2025 04:52 PM

புதுடில்லி: தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, விடுதலை போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை; இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழகத்தைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாசார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.