சர்ச்சை என்பது குல்கர்னிக்கு சாதாரணம் : இவர், இப்படி...
சர்ச்சை என்பது குல்கர்னிக்கு சாதாரணம் : இவர், இப்படி...
ADDED : அக் 12, 2011 12:23 AM

நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கில், அமர்சிங் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர், சுதீந்திர குல்கர்னி. இவர், அத்வானியின் முன்னாள் உதவியாளர். பா.ஜ.,விலும், முக்கிய பொறுப்பில் பணியாற்றிய அனுபவம் உடையவர்.
கடந்த 1996ல் இவர், பா.ஜ.,வில் சேர்ந்தார். பா.ஜ., ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட, டில்லி-லாகூர் பஸ் போக்குவரத்து, இந்தியா ஒளிர்கிறது என்ற பிரபலமான விளம்பரம் உள்ளிட்ட விஷயங்களில், குல்கர்னியின் பங்கு மிகவும் முக்கியமானது. வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, பிரதமர் அலுவலகத்தில் கொடிகட்டிப் பறந்தவர் இவர் தான்.
வாஜ்பாயின் பொதுக் கூட்ட பேச்சுகளை தயாரித்துக் கொடுத்தவரும் இவரே. வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து விலகிய பின், அத்வானியின் விசுவாசியாக மாறினார். பா.ஜ.,வின் தேர்தல் பணிகளிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அத்வானி, பாகிஸ்தானுக்குச் சென்றபோது, ஜின்னாவைப் புகழ்ந்து பேசினார். இதனால், அவர், பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது. இதற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தான் காரணம் எனக் கூறி, அதை கடுமையாக விமர்சித்தார், குல்கர்னி. இதனால், படிப்படியாக கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.
ஜஸ்வந்த் சிங் எழுதிய, 'ஜின்னா-இந்தியா-பாகிஸ்தான்-சுதந்திரம்'என்ற புத்தகம், பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இதனால், கட்சியில் இருந்து ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். அப்போது, ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார், சுதீந்திர குல்கர்னி. இவரின் படுவேகமான அரசியல் பணிகளையும், திறமையையும் அறிந்த, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி, அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தார். கட்சியில் உள்ள மற்ற மூத்த தலைவர்கள், இதை விரும்பவில்லை. குல்கர்னி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிரான கருத்து உடையவர் என்றும், பா.ஜ.,வில் சேர்வதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவர் என்றும், இவர்கள் கூறினர்.
பிரபலமான பத்திரிகைகளில் சுதீந்திர குல்கர்னியின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. மும்பையில் இருந்து வெளியாகும்,'ப்ளிட்ஸ்' பத்திரிகையிலும், இவர் முன்பு பணியாற்றியுள்ளார். தற்போது ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ள இவர்,'ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நான் எந்த குற்றமும் செய்யவில்லை. இந்த ஊழலை, மீடியாக்கள் மூலம், உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது மட்டும் தான், இந்த விவகாரத்தில் என் முக்கியமான பங்கு. ஊழலை வெளி உலகிற்கு தெரியவைத்தது குற்றம் என்றால், அதற்காக சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்' என, கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், தைரியமாக பேட்டி அளித்தவர்.
- நமது சிறப்பு நிருபர் -

