உ.பி.,யில் மதமாற்ற முயற்சி முறியடிப்பு; கேரளாவை சேர்ந்த நான்கு பேர் கைது
உ.பி.,யில் மதமாற்ற முயற்சி முறியடிப்பு; கேரளாவை சேர்ந்த நான்கு பேர் கைது
ADDED : ஜூன் 09, 2026 07:35 PM

நமது நிருபர்
உ.பி.,யின் சீதாபூர் மாவட்டத்தில் மிஸ்ரிக் பகுதியில மதம் மாற்றும் முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சுரேஷ் சந்திரா, கமலேஷ் குமார், ஷ்ரவன் குமார், அருண் அசுதாசன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கூடுதல் எஸ்.பி., துர்கேஷ் சிங் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நான்கு பேரும், 'மத்திய உ.பி., மிஷன் நெட்வார்க்' என்ற அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் மற்றும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களிடம் மதம் சார்ந்த புத்தகங்களை கொடுத்து மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த நெட்வொர்க் பெயரில் உருவாக்கப்பட்ட, 'வாட்ஸாப்' குழுவில் இணைந்து தீவிரமாக செயல்பட்டனர். சமூகவலைதளம் மூலம் அந்த பகுதி மக்களுடன் தொடர்பில் இருந்ததுடன், பல்வேறு இடங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் ஏற்பாடு செய்து அதில் பொதுமக்களை பங்கேற்க செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேர் மீதும் பாரதிய நியாய சங்ஹிதா சட்டம் மற்றும் உத்தர பிரதேச சட்டவிரோத மதமாற்ற சட்டப்பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து 529 மத பிரசங்க புத்தகங்கள், 151 நோட்டீஸ்கள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போன்கள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளன. முதற்கட்ட ஆய்வில், ஒரு வாட்ஸாப் குழு பற்றிய விவரம் கிடைத்துள்ளது. இது தவிர சந்தேகத்திற்கிடமான சில நிதி பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அது குறித்து விசாரணை நடக்கிறது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த குழுவை சேர்ந்தவர்கள் யார் எனவும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
