படிப்படியாக உயர்ந்தது பஞ்சு விலை ஒரு கேண்டி 56,000 ரூபாயை தொட்டது
படிப்படியாக உயர்ந்தது பஞ்சு விலை ஒரு கேண்டி 56,000 ரூபாயை தொட்டது
ADDED : ஜன 15, 2026 01:30 AM

திருப்பூர்: பஞ்சு விலை படிப்படியாக அதிகரித்து, 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி, 56,000 ரூபாயாக உயர்ந்துள்ளதால், நுாற்பாலைகள் கவலை அடைந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் துவங்கி அடுத்த ஆண்டு செப்., வரை பருத்தி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் நடப்பு பருத்தி ஆண்டின் துவக்கத்தில், பஞ்சு விலை, கேண்டி 53,000 ரூபாய் முதல், 54,000 ரூபாய் வரை விற்கப்பட்டது.
அமெரிக்க பஞ்சு இறக்குமதிக்கு ஏதுவாக, மத்திய அரசு, ஆக., முதல் டிச., மாதம் வரை, இறக்குமதி வரி 11 சதவீதத்தில் இருந்து விலக்கு அளித்தது; ஜவுளி துறையினரும், பஞ்சு இறக்குமதி செய்து தேவையை பூர்த்தி செய்தனர்.
இதற்கிடையே பஞ்சு இறக்குமதி வரிவிலக்கு சலுகையும், டிச., 31ம் தேதியுடன் முடிவடைந்தது. நடப்பாண்டில், பருத்தி மகசூல் மேலும் குறையுமென, ஜவுளித்துறை ஆணையம் கணக்கிட்டுள்ளது.
இதன் காரணமாக, பஞ்சு விலை கடந்த இரண்டு வாரங்களில், படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்திய பருத்தி கழகம், விவசாயிகளிடம் இருந்து, கடந்த சீசனில், 100 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு கொள்முதல் செய்திருந்தது. கடந்த, 9ம் தேதி நிலவரப்படி, 98.53 லட்சம் பேல்களை விற்பனை செய்துள்ளது. துவக்கத்தில், கேண்டி ஒன்றுக்கு 300 முதல், 500 ரூபாய் வரை தள்ளுபடி சலுகையில் விற்பனை செய்தது.
பஞ்சு இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகை நீட்டிக்கப்படாததால், திடீரென பஞ்சுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. இந்திய பருத்தி கழகமும், கேண்டிக்கு, 800 முதல் 1,200 ரூபாய் வரை கூடுதல் விலையில் விற்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், சீசன் துவங்கிய மூன்று மாதங்களில், 1,500 ரூபாய் வரை, பஞ்சு விலை உயர்ந்துள்ளது.
செயற்கையான பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த, பஞ்சு இறக்குமதிக்கான வரிச்சலுகையை, மேலும் மூன்று மாதங்களுக்காவது நீட்டிக்க வேண்டும்,'' என்றார்.

