கார் மீது உரசிய பைக் ஓட்டுனரை துரத்தி கொன்ற தம்பதி கைது
கார் மீது உரசிய பைக் ஓட்டுனரை துரத்தி கொன்ற தம்பதி கைது
ADDED : அக் 30, 2025 08:05 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் கார் மீது மோதி நிற்காமல் சென்ற பைக்கை துரத்திச் சென்று காரால் மோதி வாலிபரை கொலை செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, ஜே.பி.நகர் 7வது கிராஸ் ஸ்ரீராம் லே - அவுட் பகுதியில், கடந்த 25ம் தேதி இரவு, பைக் மீது கார் மோதிய விபத்தில், கோனனகுண்டேயை சேர்ந்த உணவு விற்பனை பிரதிநிதி தர்ஷன், 24, என்பவர் இறந்தார். அவரது நண்பர் வருண், 24, படுகாயம் அடைந்தார்.
ஜே.பி.நகர் போக்குவரத்து போலீசார், விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பைக் மீது வேண்டுமென்றே, கார் மோதி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
வாகனத்தின் பதிவெண் அடிப்படையில், காரை ஓட்டிச் சென்ற ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார், 34, அவரது மனைவி ஆர்த்தி சர்மா, 30, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு தெற்கு போலீஸ் துணை கமிஷனர் லோகேஷ் நேற்று அளித்த பேட்டி:
கேரளாவைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மனோஜ்குமார், தன் மனைவி ஆர்த்தி சர்மாவுடன், பெங்களூரில் வசித்தார். கடந்த 25ம் தேதி இரவு இருவரும், வெளியே சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, மனோஜ்குமார் கார் கண்ணாடி மீது, தர்ஷன் ஓட்டிச் சென்ற பைக் உரசியது. இதில் கண்ணாடி உடைந்தது.
ஆயினும் பைக்கை நிறுத்தாமல் தர்ஷன், அவரது நண்பர் வருண் அங்கிருந்து சென்றனர். கோபம் அடைந்த மனோஜ்குமாரும், அவரது மனைவியும் காரில் விரட்டினர். 2 கி.மீ., விரட்டிச் சென்ற நிலையில், ஒரு இடத்தில் பைக் மீது காரால் மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.
பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட தர்ஷன், சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் நடந்த பின், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த தம்பதி, தங்கள் காரின் உடைந்த கண்ணாடியை அங்கிருந்து எடுத்துச் சென்று ஆதாரங்களை அழிக்க முயன்றனர்.
தம்பதி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிறையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

