சாலை பணிக்கு கோர்ட் தடை மூன்று ஊராட்சிகளில் 'பந்த்'
சாலை பணிக்கு கோர்ட் தடை மூன்று ஊராட்சிகளில் 'பந்த்'
ADDED : ஜூலை 13, 2025 01:19 AM

மூணாறு:நேரியமங்கலம் - வாளரா இடையே ரோடு பணி செய்ய, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், மூன்று ஊராட்சிகளில் 'பந்த்' நடந்தது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், மூணாறு - கொச்சி இடையே, 126 கி.மீ., துாரம், 1,250 கோடி ரூபாய் செலவில், ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை, 14.5 கி.மீ., துாரம் ரோடு அடர்ந்த வனத்தின் வழியாக செல்கிறது.
அப்பகுதியில் ஏராளமான மரங்களை வெட்டி அகற்றி, மத்திய அரசின் அனுமதி இன்றி பணிகள் நடப்பதாகவும், அதை தடுத்து நிறுத்துமாறும் தொடுபுழாவை சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜெயசந்திரன், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதி, வனப்பகுதிக்கு உட்பட்டது என, கேரள தலைமை செயலர் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அதை மேற்கோள் காட்டி, நேரியமங்கலம், வாளரா இடையே ரோடு பணிகள் செய்ய தடை விதித்து, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நிதின்ஜாம்தார், பசந்த பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
உத்தரவிற்கு எதிராக அடிமாலி, வெள்ளத் துாவல், பள்ளிவாசல் ஆகிய ஊராட்சிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, ஆளும் கூட்டணியான இடது சாரி கூட்டணி சார்பில் நேற்று 'பந்த்' நடந்தது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், வாளரா வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

