சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க கோர்ட் உத்தரவு
சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க கோர்ட் உத்தரவு
ADDED : ஜன 05, 2024 01:13 AM

திருவனந்தபுரம், சபரிமலையில் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், குளிர்பானங்களை வழங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல பூஜைக்காக கடந்த நவம்பரில் திறக்கப்பட்டது.
மண்டல பூஜை முடிந்து மூடப்பட்ட நடை, மகர விளக்கு கால பூஜைகளுக்காக கடந்த 30ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரை கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சரங்குத்தியைக் கடந்து மரக்கூட்டம் வரை பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்பனை தரிசித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாவதை அறிந்த கேரள உயர் நீதிமன்றம், அது குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறப்படுவதாவது:
மண்டல - மகரவிளக்கு திருவிழாக்களால் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால், பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல மணி நேர நெரிசலில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு, குடிநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்க வேண்டும்.
அவர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் உள்ள முக்கிய வளைவுகளில் போதுமான தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
போதுமான குடிநீர், சிற்றுண்டி ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள், நிலக்கல்லில் உள்ள தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தப்படுவதை தேவசம் போர்டு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.