டில்லி ஐ.ஐ.டி., மாணவர்கள் தற்கொலை; விசாரணைக்கு உத்தரவிட்டது கோர்ட்
டில்லி ஐ.ஐ.டி., மாணவர்கள் தற்கொலை; விசாரணைக்கு உத்தரவிட்டது கோர்ட்
ADDED : மார் 25, 2025 02:52 AM
புதுடில்லி: டில்லி ஐ.ஐ.டி., உயர் கல்வி நிறுவனத்தில் படித்த இரண்டு மாணவர்கள் தற்கொலை விவகாரத்தை விசாரிக்க நேற்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 'மாணவர்கள் தற்கொலை ஏன் நடக்கிறது' என, நாடு முழுதும் ஆய்வு செய்ய, தேசிய அளவிலான சிறப்பு பணி குழுவையும் அமைத்தது.
டில்லி ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படித்த ஆயுஷ் அஸ்னா, அனில் குமார் ஆகிய மாணவர்கள், 2023ல் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஐ.ஐ.டி.,யில் நிலவிய ஜாதி வேற்றுமை தான், மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் என, பல தரப்பிலும் புகார் எழுந்தது.
மேல் முறையீடு
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, அவர்களின் பெற்றோர் கேட்டுக் கொண்ட போது, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது. அதை எதிர்த்து அந்த மாணவர்களின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:
டில்லி ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, எந்த கருத்தையும் இப்போது நாங்கள் பதிவு செய்ய விரும்பவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, நேர்மையான விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்பதால், அதற்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்.
டில்லி தென் மேற்கு மாவட்ட போலீஸ் கமிஷனர் வழக்கு பதிவு செய்ய வேண்டும். உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து, இந்த விவகாரம் குறித்து முறையாக விசாரிக்க வேண்டும்.
எந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிக்கின்றனரோ, அந்த கல்வி நிறுவனங்கள் தான், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த வகையில், டில்லி ஐ.ஐ.டி.,யில் நடந்த இரண்டு மாணவர்களின் தற்கொலை தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு மாணவரின் தற்கொலையும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் இந்த விவகாரம் குறித்து, உண்மை நிலை தெரிய வேண்டும்.
சிறப்பு பணி குழு
எனவே, அனைத்து மாநில அரசுகளும், மாணவர்களின் மன நிலையை ஆராய வேண்டியது அவசியம். இந்த பணிக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் அமைய உள்ள சிறப்பு பணி குழுவில் உயர் அந்தஸ்து அதிகாரிகளை நியமித்து, நேர்மையான முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டியது, அனைத்து துறை அதிகாரிகளின் பொறுப்பு.
எனவே, அனைத்து தரப்பினரும் தங்களிடம் உள்ள தகவல்கள், விபரங்களை இந்த சிறப்பு குழுவுக்கு வழங்கி, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பதை உரிய முறையில் ஆராய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.