முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்துக்கு சாதகமாக கோர்ட் உத்தரவு
முல்லை பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்துக்கு சாதகமாக கோர்ட் உத்தரவு
ADDED : மே 20, 2025 05:02 AM

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வந்த நிலையில், தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது.
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது. கடந்த விசாரணையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்த வழக்கை, நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
முல்லை பெரியாறு அணையை சுற்றியுள்ள மரங்களை வெட்ட, நான்கு வாரங்களில் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பான தமிழக அரசின் விண்ணப்பத்தின் மீது, கேரள அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை முதல், வல்லக்கடவு சாலை வரை உள்ள காட்டு சாலையை கேரள அரசே சீரமைக்க வேண்டும். இந்த பணிகள் நடக்கும் போது, தமிழக அரசு அதிகாரிகள் உடனிருக்க வேண்டும். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும். அதே போல், அணை பகுதியில் மராமத்து பணிகளை மேற்கொள்ள, படகு ஒன்றை தமிழக அரசுக்கு கேரளா வழங்க வேண்டும்.
இது தவிர, வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அது குறித்து முல்லை பெரியாறு மேற்பார்வை குழுவிடம் முறையிடலாம். அது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் அந்த குழு முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை ஒத்திவைத்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -