போதையில் தந்தை, சித்தப்பாவை அடித்து கொன்ற மகனுக்கு 'காப்பு'
புதுடில்லி: மது போதையில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு டில்லி மாவட்டத்தில் உள்ள துவாரகா அருகே உள்ள உத்தம்நகரில் உள்ளது, மோகன் கார்டன். இரண்டு நாட்களுக்கு முன், இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தேவேந்தர்குமார், 50, மற்றும் அவரின் தம்பி அமித், 48, ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. தேவேந்தர்குமாரின் மகன், ஈஸ்வர், 22, என்பவரை காணவில்லை.
அதையடுத்து, அவர் தான், தன் தந்தை மற்றும் சித்தப்பாவை கொன்றிருக்க வேண்டும் என போலீசார் கருதினர். ஆனால், போலீஸ் பிடியில் சிக்காமல், ஈஸ்வர் தப்பிய படி இருந்தார். அவரின் பதுங்குமிடத்தில் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், மது போதையில் தந்தை மற்றும் சித்தப்பாவை அடித்து கொன்றதாக கூறினார். போலீசார் அந்த நபரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
பள்ளி வாகனம் மோதியதில் மற்றொரு பள்ளி சிறுவன் பலி
குருகிராம்: டில்லியில் ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், மற்றொரு பள்ளி வேனால், நசுக்கப்பட்டான். பலத்த காயமடைந்த அந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான்.
சிவனேஷ் திரிபாதி என்ற சிறுவன் தன் குடும்பத்தினருடன், குருகிராம் அருகே உள்ள ஷியாம்குஞ்ச் என்ற இடத்தில் வசித்து வருகிறார். உத்தர பிரதேசத்தின் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த அவரின் தந்தை பெயர் சந்தோஷ்குமார் திரிபாதி.
கடந்த திங்கள் கிழமை மாலையில், பள்ளி சென்று வீடு திரும்பிய சிறுவன் சிவனேஷ், சாக்லேட் வாங்குவதற்காக, அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தான். அப்போது, எம்.எஸ்., பப்ளிக் ஸ்கூல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த மாருதி ஈகோ வேன், மாணவர்களை இறக்கி விட்டு, திரும்பிக் கொண்டிருந்தது.
அப்போது, பின்னோக்கி வேகமாக வந்த அந்த வேனில் சிக்கி, எட்டு வயது சிறுவன் சிவனேஷ் இறந்தான். காதிலும், கண்ணிலும் ரத்தம் வந்த நிலையில், அந்த சிறுவன் இறந்து கிடந்தான். எனினும், தகவல் அறிந்தவர்கள், அந்த சிறுவனின் உடலை மேதாந்தா மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தப்பியோடிய தனியார் பள்ளி வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி கால் சென்டர் நடத்தி ஏமாற்றிய கும்பல் சிக்கியது
புதுடில்லி: மத்திய டில்லி மாவட்டத்தில் கார் உரிமையாளர்களிடம், ரோடு சைடு அசிஸ்டென்ஸ் என கூறி, போலியாக பல லட்சம் ரூபாயை சுருட்டிய, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக அந்த நபர்கள் போலியாக நடத்தி வந்த கால் சென்டரையும் போலீசார் இழுத்து மூடியுள்ளனர்.
மத்திய டில்லி மாவட்டத்தில் உள்ளது குரு அர்ஜுன் நகர் பகுதி. அங்குள்ள ரத்தன்லால் காம்ப்ளக்ஸ் என்ற இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த, 12 பேரை கைது செய்தனர்.
நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம், ரோடு சைடு அசிஸ்டென்ஸ் என கூறி, பலரையும் ஏமாற்றி, பணம் பறித்து வந்துள்ளனர். இதற்காக, அந்த கும்பல் நடத்தி வந்த போலி கால் சென்டரையும் போலீசார், இழுத்து மூடி விசாரிக்கின்றனர்.
இதன் உரிமையாளர்களான சவுரவ் மற்றும் ஷா நவாஸ், 28, ஆகியோரையும் கைது செய்துள்ள போலீசார், எவ்வளவு காலமாக இந்த போலி கால் சென்டர் நடத்தி வந்ததாக விசாரித்தனர்.
சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல் 45 வயது நபர் போலீசில் சிக்கினார்
புதுடில்லி: வட மேற்கு டில்லியின் ரோஹினி என்ற இடத்தில், வயதுக்கு வராத சிறுமியர் பலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, 45 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
கடைசியாக அந்த நபர், 8 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை பார்த்த அந்த பகுதி மக்கள், அவரை அடித்து விளாசி, போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அவரின் அத்துமீறல்கள் பெரும்பாலும் சிறு குழந்தைகளாகவே இருந்துள்ளன. அதுதொடர்பாக, விசாரித்து வருகின்றனர்.

