குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 7 ஆண்டில் 40 சதவீதம் அதிகரிப்பு: 'போக்சோ' வழக்குகள் இரட்டிப்பு
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 7 ஆண்டில் 40 சதவீதம் அதிகரிப்பு: 'போக்சோ' வழக்குகள் இரட்டிப்பு
ADDED : ஜன 25, 2026 12:22 AM

புதுடில்லி: நாட்டில், 2016 - 2023 வரை, குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள், 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த காலத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளும் இரு மடங்கு உயர்ந்துள்ளன.
இது குறித்து, தேசிய குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2016-ல், 36,022 ஆக இருந்த போக்சோ வழக்குகள், 2023-ல், 67,694 ஆக அதிகரிப்பு. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 36,321-லிருந்து, 68,636 ஆக உயர்வு
மேலும் 2016ல், 1 லட்சமாக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2023ல், 1.77 லட்சமாக அதிகரிப்பு. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், 1.11 லட்சத்திலிருந்து, 1.86 லட்சமாக உயர்வு
ஒட்டுமொத்தத்தில், 2016 - 2023- வரை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், 12.05 லட்சம் பேர் பாதிப்பு. இது தொடர்பாக, 11.43 லட்சம் வழக்குகள் பதிவு
18 வயதுக்குட்பட்டோரில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில், 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் சிறுமியர்
கடந்த 2018 - 2023 வரை, 1.89 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதில், 1.87 லட்சம் பேர் சிறுமியர்; 1,920 பேர் சிறுவர்கள்.
12 - 16 வயதுக்குட்பட்ட பிரிவில், 72,613 பேர் பாதிப்பு. இவர்களில், 716 பேர் சிறுவர்கள். 16 - 18 வயதுக்குட்பட்ட பிரிவில், 95,543 பேர் பாதிப்பு. இவர்களில், 304 பேர் சிறுவர்கள்
கல்வி அல்லது வேலைக்காக அதிக துாரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால்,
16 - 18 வயதுக்குட்பட்டோர் எளிதில் பாலியல் குற்றங்களுக்கு ஆளாவதாக தகவல்
மாநிலங்களை பொறுத்தவரை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில், 2023ல், 4,672 பாதிக்கப்பட்டவர்களுடன் மஹாராஷ்டிரா முதலிடம். அடுத்தபடியாக, ம.பி., - உ.பி., - தமிழகம் உள்ளன.
கடந்த 2016 - 2023 வரை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட, 12.05 லட்சம் பேரில், 5.32 லட்சம் பேர் கடத்தல் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள்.
கடத்தப்பட்ட சிறுமியரில், 1 லட்சம் பேர் கட்டாய திருமணத்திற்காக கடத்தல். 2016-ல், திருமணத்திற்காக கடத்தப்படும் சிறுமியரின் சதவீதம், 30- ஆக இருந்தது; 2023ல், 20- ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

