ADDED : அக் 29, 2024 07:45 AM

சிக்கமகளூரில், சிருங்கேரி சாரதாம்பிகை கோவில் மிகவும் பிரபலம். அதேபோன்று இங்கு லட்சுமி தேவிக்கும் கோவில் உள்ளது. அஷ்ட லட்சுமிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கலாம்.
சிக்கமகளூரு மக்கள், இதற்கு முன் லட்சுமி தேவியை தரிசிக்க, கடூர், என்.ஆர்.புரா அல்லது தொலைவில் உள்ள துமகூரு மாவட்டத்தின் கொரவனஹள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. இப்போது அவர்கள் வேறு இடத்துக்கு செல்ல தேவையில்லை. சிக்கமகளூரிலேயே லட்சுமி தேவியை தரிசிக்கலாம்.
சிக்கமகளூரு நகரின் ஐ.டி.எஸ்.ஜி., கல்லுாரி அருகில் மஹாலட்சுமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அஷ்டலட்சுமியை தரிசிக்கலாம். மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது. கோவில் கட்டப்பட்ட இடத்தில், இதற்கு முன் காபி கியூரிங் இருந்தது. நாளடைவில் காபி கியூரிங் மூடப்பட்டது. அதன்பின் பத்து ஆண்டுகள், இந்த இடம் பாழடைந்து கிடந்தது.
காபி கியூரிங் உரிமையாளர் ராம்ராவ், இந்த இடத்தில் லட்சுமி கோவில் கட்ட முடிவு செய்தார். அதன்படி கோவில் கட்டி முடித்தார். அங்கு மஹாலட்சுமியும், அஷ்ட லட்சுமி விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 2020 பிப்ரவரியில் கோவிலை, சிருங்கேரி சாரதா பீடத்தின் விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் திறந்து வைத்தார்.
கோவிலில் ஆதிலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, பாக்கிய லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என, அஷ்ட லட்சுமி விக்ரகங்களை தரிசிக்கலாம்.
தினமும் காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
லட்சுமி கோவிலுக்காக வேறு இடத்துக்கு சென்ற சிக்கமகளூரு மக்களுக்கு, நகரிலேயே கட்டப்பட்ட கோவில் மகிழ்ச்சி அளித்துள்ளது.
கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், சிக்கமகளூருக்கு பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களும் ஏராளமாக இயங்குகின்றன. எளிதாக கோவிலை அடையலாம்
. - நமது நிருபர் -

