தாவணகெரே தொகுதி 'சீட்' விவகாரம் சிவசங்கரப்பாவை காங்., மேலிடம் பகைக்குமா?
தாவணகெரே தொகுதி 'சீட்' விவகாரம் சிவசங்கரப்பாவை காங்., மேலிடம் பகைக்குமா?
ADDED : மார் 08, 2024 11:05 PM

தாவணகெரே லோக்சபா தொகுதி 'சீட்' விவகாரத்தில், மூத்த தலைவர் சாமனுார் சிவசங்கரப்பாவை, காங்கிரஸ் மேலிடம் பகைத்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
கர்நாடகாவின் பழைய மைசூரு பகுதியில் இருக்கும் ஆதரவு, வடமாவட்டங்களில் காங்கிரசுக்கு இல்லை. இதற்கு முக்கிய காரணம், லிங்காயத் சமூகம் புறக்கணிப்பு தான்.
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த வீரேந்திர பாட்டீல், 1990 - 1992ல் முதல்வராக இருந்தார். அதன்பின் காங்கிரசில், லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவருக்கு, முதல்வர் பதவி கிடைக்கவில்லை.
ஆனால், பா.ஜ., எப்போதுமே லிங்காயத் சமூகத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அந்த சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை முதல்வராக்கி, பா.ஜ., அழகு பார்த்தது. வடமாவட்டங்களில் ஏராளமான லிங்காயத் மடங்கள் உள்ளன.
இவற்றின் மடாதிபதிகளுடன், பா.ஜ., தலைவர்களுக்கு நல்லுறவு உள்ளது. இதனால் மடாதிபதிகள் உத்தரவுப்படி, பா.ஜ.,வை, லிங்காயத் மக்கள் ஆதரித்து வந்தனர்.
'2 ஏ' இடஒதுக்கீடு
இந்நிலையில், லிங்காயத் சமூகத்தின் உட்பிரிவான, பஞ்சமசாலி சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், முந்தைய பா.ஜ., அரசு அலட்சியம் காட்டியது. பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த போதும் கண்டுகொள்ளவில்லை. இதை காங்கிரஸ் சாதகமாக பயன்படுத்தி கொண்டது.
'உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறோம்' என்று கூறி, கடந்த சட்டசபை தேர்தலில் லிங்காயத் சமூக ஓட்டுகளை காங்கிரஸ் கவர்ந்தது. முதல்வர் பதவிக்கு லிங்காயத் சமூக எம்.எல்.ஏ.,வான எம்.பி.பாட்டீலும் துண்டு போட்டார். ஆனால் குருபர் சமூகத்தை சேர்ந்த, சித்தராமையாவுக்கே மீண்டும் முதல்வர் பதவி கிடைத்தது.
இந்நிலையில், அகில இந்திய வீரசைவ லிங்காயத் தலைவராக உள்ள, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பாவுக்கும், சித்தராமையாவுக்கும் இடையில், கடந்த சில மாதங்களாக உரசல் ஏற்பட்டு உள்ளது.
'காங்கிரஸ் ஆட்சியில் லிங்காயத் சமூக அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்று, குண்டை துாக்கி போட்டார் சிவசங்கரப்பா. அவரை மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தனர்.
மருமகளுக்கு 'சீட்'
இந்நிலையில், சாமனுார் சிவசங்கரப்பாவும், முதல்வர் சித்தராமையாவும் மேலும் ஒரு சுற்று மோதலுக்கு தயாராகி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் தாவணகெரே தொகுதியை தன் மருமகள் பிரபாவுக்கு வழங்க வேண்டும் என்று, சிவசங்கரப்பா கேட்டு உள்ளார். ஆனால், இதற்கு சித்தராமையா உடன்படவில்லை.
சிவசங்கரப்பா எம்.எல்.ஏ.,வாகவும், அவரது மகன் மல்லிகார்ஜுன் தோட்டக்கலை துறை அமைச்சராகவும் இருக்கின்றனர். பிரபாவுக்கு சீட் கொடுத்தால், குடும்ப அரசியல் என்று, எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும் என்று, கட்சி மேலிடத்திடம் சித்தராமையா கூறி உள்ளார்.
தாவணகெரேயில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்துபவரும், குருபர்சமூகத்தை சேர்ந்தவருமான வினய்குமாருக்கு, சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது, சித்தராமையாவின் கணக்காக உள்ளது.
ஆனால் மருமகளுக்கு சீட் வாங்கி கொடுக்க, திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார் சிவசங்கரப்பா. ஒருவேளை இவரை பகைத்து கொண்டு, கட்சி மேலிடம் வினய்குமாருக்கு சீட் வழங்கினால், தேர்தலில் காங்கிரசுக்கு பெரிய அடி விழுவது உறுதி.
ஏன் என்றால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர் லிங்காயத் சமூகத்தினர். சிவசங்கரப்பாவின் கண் அசைவில் செயல்பட கூடியவர்கள். கட்சியா, சமூகமா என்று வந்தால், சமூகமே முக்கியம் என்று சொல்ல கூடியவர்கள்.
சிவசங்கரப்பா சொல்வதை கேட்டு, எம்.எல்.ஏ.,க்கள் யாராவது பதவியை ராஜினாமா செய்தால், காங்கிரசுக்கு தான் சிக்கல். இதனால் மேலிடம் என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

