கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு
கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு
ADDED : மார் 08, 2025 05:35 PM

போபால்: கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் லவ் ஜிகாத் குறித்து அவர் பேசியதாவது: நமது அப்பாவி மகள்களுக்கு எதிராக அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களை நமது அரசு சும்மா விடாது. மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்வதை அனுமதிக்க முடியாது.
இச்செயலில் ஈடுபடும் நபர்களை வாழவே விடக் கூடாது. மத சுதந்திர சட்டத்தின் மூலம் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2021ம் ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி, கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக, மத சுதந்திர சட்டத்தை நிறைவேற்றியது. உ.பி., குஜராத் உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற சட்டம் ஏற்கனவே உள்ளது.