ADDED : மார் 01, 2024 11:51 PM

ஆரம்பாக்: ''மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை பார்த்து, தேசமே கொதித்துப் போயுள்ளது. இதற்கு காரணமான திரிணமுல் காங்கிரஸ் கட்சியை, வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின், வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் ஷாஜஹான் ஷேக் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் நில அபகரிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
அவருக்கு எதிராக, பெண்கள் தீவிர போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 55 நாட்கள் தலைமறைவுக்கு பின், ஷாஜஹான் ஷேக் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மேற்கு வங்க அரசியலை கலகலக்க செய்துள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக் என்ற இடத்தில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
சந்தேஷ்காலியை சேர்ந்த நம் சகோதரிகளுக்கு திரிணமுல் காங்., பிரமுகர் செய்துள்ள கொடுமைகளை பார்த்து, தேசமே கொதித்து போயுள்ளது.
இதை தட்டிக் கேட்காத, 'இண்டியா' கூட்டணியினர், 'கெட்டதை பார்க்காதே; கெட்டதை கேட்காதே; கெட்டதை பேசாதே' என்ற காந்தியின் குரங்கு போல அமைதியாக உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யாத முதல்வர் மம்தா, குற்றவாளிகளை பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தார்.
பா.ஜ., நடத்திய தொடர் போராட்டம் காரணமாக நெருக்கடிக்கு உள்ளான மாநில அரசு, இறுதியில் ஷாஜஹானை கைது செய்துள்ளது.
இதற்கெல்லாம் திரிணமுல் காங்., பதில் சொல்லியே ஆக வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் மம்தா கட்சியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கிடையே, நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்ற, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை விரைந்து ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்,'' என்றார்.

