டில்லி வர்த்தகர் சுட்டுக்கொலை உடலில் 69 தோட்டாக்கள் அகற்றம்
டில்லி வர்த்தகர் சுட்டுக்கொலை உடலில் 69 தோட்டாக்கள் அகற்றம்
ADDED : டிச 20, 2025 01:50 AM

புதுடில்லி: டில்லியில், வீட்டருகே சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தகர் உடலில் இருந்து, 69 தோட்டாக்கள் எடுக்கப்பட்டன.
தெற்கு டில்லியின் அயாநகரைச் சேர்ந்த வர்த்தகர் ரத்தன் லோஹியா, 52. இவர் கடந்த மாதம், 30ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார்.
ஞாயிறு சந்தை அருகே அவர் சென்றபோது, காரில் காத்திருந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ரத்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் கிடந்த மூன்று தோட்டாக்கள் மற்றும் காலி உறையை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், பிரேத பரிசோதனையில் அவர் உடலில், 69 தோட்டாக்கள் துளைத்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் ரத்தன் குடும்பத்தினர் அளித்த புகாரில், தங்கள் எதிரியான ரம்பிர் லோஹியா என்பவரின் மகன் அருண், கடந்த மே 15ல் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அருண் கொல்லப்பட்ட சம்பவத்தில் ரத்தனின் மூத்த மகன் தீபக் கைது செய்யப் பட்டுள்ளார்.
இந்நிலையில் ரத்தன் கொலை சம்பவம் குறித்த விசாரணையில், மூன்று பேர் கும்பல் பதிவு எண் இல்லாத காரில் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது, 'சிசிடிவி' பதிவில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் வெளிநாட்டை சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

