பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., மீதான தண்டனையை நிறுத்தி வைக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
பா.ஜ., 'மாஜி' எம்.எல்.ஏ., மீதான தண்டனையை நிறுத்தி வைக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
ADDED : ஜன 20, 2026 06:44 AM

உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, 'லாக் அப்'பில் மரணமடைந்த வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட, 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில், 2017 ஜூனில், வேலை கேட்டு வந்த சிறுமியை கடத்திச் சென்று, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த குல்தீப் சிங் செங்கர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
அவரது துாண்டுதலின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஆயுத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2018 ஏப்., 9ல், போலீஸ் ஸ்டேஷனில் அவர் உயிரிழந்தார்.
பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கிலும், 2020 மார்ச் 13ல், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை நிறுத்தி வைக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், குல்தீப் சிங் செங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை நேற்று விசாரித்த நீதிபதி ரவீந்தர் துதேஜா பிறப்பித்த உத்தரவு:
குல்தீப் சிங் செங்கர் ஏற்கனவே, 7.5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ள போதும், அவரது மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஏற்பட்டுள்ள தாமதத்தை ஒரு காரணமாக கருதி, அவருக்கு நிவாரணம் வழங்க முடியாது.
இந்த தாமதத்திற்கு அவர் தாக்கல் செய்த பல இடையீட்டு மனுக்களும் ஒரு காரணம்.
தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, மேல்முறையீட்டு மனுவின் தகுதியின் அடிப்படையில் விரைவாக விசாரிப்பதே சரியானதாக இருக்கும். அதனால், அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்., 3க்கு ஒத்தி வைத்தார்.
பலாத்கார வழக்கில், குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை, கடந்த ஆண்டு டிச., 23ல், டில்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது பேசு பொருளானது. இதில் தலையிட்ட உச்ச நீதிமன்றம், டிச., 29ல், இடைக்கால தடை விதித்தது.
- டில்லி சிறப்பு நிருபர் -:

