மத்திய சுற்றுலா அமைச்சருக்கு டில்லி சபாநாயகர் கடிதம்
மத்திய சுற்றுலா அமைச்சருக்கு டில்லி சபாநாயகர் கடிதம்
ADDED : மே 13, 2025 10:10 PM
விக்ரம்நகர்:டில்லி சட்டசபைக் கட்டடத்தை வரலாற்று பாரம்பரிய மையமாக மேம்படுத்துவதற்கான திட்டத்துடன் மத்திய அரசுக்கு சபாநாயகர் விஜேந்தர் குப்தா கடிதம் எழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநில அரசின் அதிகாரிகள் கூறியதாவது:
டில்லி சட்டசபை கட்டடம், 1912ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போது இந்த கட்டடத்தில் தான் பார்லிமென்ட் இயங்கி வந்தது. பின், இது 1927ம் ஆண்டு சன்சாத் பவனுக்கு மாற்றப்பட்டது.
இந்த கட்டடத்தில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அதனால் இந்த கட்டடத்துடன் கூடிய சட்டசபை வளாகத்தை ஒரு பாரம்பரிய மையமாக மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை சபாநாயகர் விஜேந்தர் குப்தா தயாரித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், டில்லி சட்டசபை கட்டடம், இந்திய வரலாற்றில் பல முக்கிய தருணங்களுக்கு சாட்சியாக இருந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திட்டத்தைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய அமைச்சரை கடிதத்தில் டில்லி சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.