விரைவில் டில்லிக்கு என தனி மின்தொகுப்பு: முதல்வர் உறுதி
விரைவில் டில்லிக்கு என தனி மின்தொகுப்பு: முதல்வர் உறுதி
ADDED : பிப் 27, 2026 02:18 AM
புதுடில்லி:டில்லி சாந்தினி சவுக் பகுதியில், டில்லிக்கு என தனி மின் தொகுப்பை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
டில்லியின் சாந்தினி சவுக் பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
வரும், 50 ஆண்டு களுக்கான மின் தொகுப்பு பணிகளை இப்போது தான், டில்லியில் துவக்கி வைக்கிறோம். டில்லிக்கு என தனியான மின் தொகுப்பை ஏற்படுத்த உள்ளோம்.
அதற்கான மின் ஒயர்களை, நிலத்தடியில் இணைப்பு கொடுக்கும் விழா நடந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், ஓல்ட் டில்லி பகுதியில் உள்ள, 28 சாலைகள் மற்றும் தெருக்கள் பயன்பெறும்.
இந்த பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார கேபிள்கள், நிலத்தடியில் அமைக்கப்படும். இதற்காக, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
எங்களின் அரசு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மின் தேவையும் ஈடுகட்டப்பட வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க, டவுன் ஹால் கட்டடத்தை புனரமைக்கும் திட்டம் விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

