துணை சபாநாயகர் தேர்தல்: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
துணை சபாநாயகர் தேர்தல்: பிரதமருக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
ADDED : ஜூன் 10, 2025 11:45 PM

'அடுத்த மாதம், 21ல் துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது, காலியாக உள்ள லோக்சபா துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
லோக்சபாவில், துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது கவலையளிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின், 93வது பிரிவின்படி, லோக்சபா எம்.பி.,க்கள் இருவரை, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக தேர்வு செய்ய முடியும்.
பொதுவாக, புதிய லோக்சபா அமைக்கப்பட்டு, 2வது அல்லது 3வது கூட்டத்தொடர்களில், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
லோக்சபா நடைமுறைகள் மற்றும் அலுவல் விதி 8 (1)ன்படி, துணை சபாநாயகருக்கான தேர்தல் நடத்தும் தேதியை, சபாநாயகரே முடிவு செய்து கொள்ளலாம்.
முதலாவது லோக்சபா முதல், 16வது லோக்சபா வரையில், ஒவ்வொரு பார்லிமென்டிலும், துணை சபாநாயகர் இருந்துள்ளார்.
மேலும், இந்த பதவிக்கு பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை நியமிக்கப்படுவதே மரபாக இருந்து வந்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், 17வது லோக்சபாவின் போது, துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. அது தற்போதைய, 18வது லோக்சபாவிலும் தொடர்கிறது.
இத்தகைய போக்கு, நாட்டின் அரசியல் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. இந்த நிலை, அரசியலமைப்பு சட்டம் வகுத்தளித்த அம்சங்களை மீறுவதாகவும் அமைந்துள்ளது.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், லோக்சபா துணை சபாநாயகர் பதவி தேர்தலுக்கான பணிகளை உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -