ADDED : நவ 08, 2024 07:37 AM

வேலைகளை விரைவில் முடிக்க காலில் சக்கரம் கட்டி கொண்டு ஓட வேண்டும் என்று கூறுவர். காலில் சக்கரம் கட்டுவதை உண்மையாக்கும் வகையில் இருப்பது ஸ்கேட்டிங் விளையாட்டு. ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள், காலில் சக்கரத்தால் ஆன ஷூவை கட்டி கொண்டு காட்டும் வித்தையை பார்க்க பிரமிப்பாக இருக்கும்.
இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு போட்டியாக சாலையில் ஸ்கேட்டிங் ஷூ அணிந்து கொண்டு செல்வர். ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதித்தவர்கள் ஏராளம். அதில் பெங்களூரின் தனுஷ் பாபுவும் ஒருவர்.
தன் 4 வயது முதலே ஸ்கேட்டிங் செல்வதில், தனுஷ் பாபுவுக்கு ஆர்வம் அதிகம். முறையாக அதற்கு பயிற்சி எடுத்தார். பெங்களூரின் கப்பன் பார்க் சாலைகளில், ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
பின், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் ஜொலித்ததால், கடந்த 2015ல் இந்திய அணிக்காக ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றார். கடந்த 2019ல் ஸ்பெயினில் நடந்த போட்டியில், இந்தியாவுக்காக ஸ்கேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 2016 முதல் 2019 வரை தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 14 தங்கம், 10 வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்கள் வென்று அசத்தினார். 100 மீட்டர் போட்டிகளில் இலக்கை விரைவாக கடந்து, சாதனை படைத்ததால் 100 மீட்டர், 'டிரிபிள் கிரவுன் கிங்' என்ற புனை பெயரும் அவருக்கு கிடைத்தது. கடந்த 2018ம் ஆண்டு கர்நாடக அரசு, தனுஷ் பாவுக்கு 'கர்நாடக கிரீட ரத்னா விருது' வழங்கி கவுரவித்தது - நமது நிருபர் -.

