மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே நடத்த கோரிய மனு டிஸ்மிஸ்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே நடத்த கோரிய மனு டிஸ்மிஸ்
ADDED : ஜன 03, 2025 04:24 AM
புதுடில்லி:மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்தக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை தமிழக அரசிடம் இருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு, பி.பி.டி.சி., என்னும் நிறுவனம் வாங்கி நிர்வகித்து வந்தது.
கடந்த 2018ல், இந்த எஸ்டேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டத்தை அந்த நிறுவனம் அறிவித்தது.
இதை எதிர்த்தும், தேயிலை தோட்டத்தை தமிழக அரசே எடுத்து நடத்த உத்தரவிடக் கோரியும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண சாமி உள்ளிட்டோர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்ட கழக நிர்வாகம் ஏற்று நடத்த சாத்தியமில்லை என்றும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த டிசம்பரில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ததுடன், தமிழக அரசு கூறியுள்ள அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து கிருஷ்ணசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது
இம்மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

