ADDED : ஜன 26, 2025 11:37 PM
புவனேஸ்வர்: ஒடிசாவில், பிஜு ஜனதா தளத்தின் மாநில அளவிலான அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டன.
ஒடிசாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில பிரதான எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தில் அடிமட்டத்தில் துவங்கி, மாநில அளவு வரையிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்த அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் முடிவு செய்தார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதை தொடர்ந்து, பிஜு ஜனதா தள கட்சியின் மாநில அளவிலான மகளிர் அமைப்பு, இளைஞர் அணி, சட்ட அணி உட்பட அனைத்து முதன்மையான அமைப்புகளும் உடனடியாக கலைக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பிரதாப் கேசரி தேப், தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசாவில் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருந்த நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது.
இதன் எதிரொலியாகவே, அந்த கட்சியின் அனைத்து அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

