ADDED : ஜூலை 25, 2025 01:02 AM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் தெரு நாய்களின் தொந்தரவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மூன்றே நாட்களில், 35க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறின.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு நகரில் தெரு நாய்களின் தொல்லையால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சாலைகளில் நடமாடவே அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எம்.ஜி.சாலை, மார்க்கெட் சாலையில் நாய்களின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது.
நேற்று முன்தினம், 3 வயது குழந்தை உட்பட எட்டுக்கும் மேற்பட்டோரை, தெரு நாய்கள் கடித்தன. குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறது. மற்றவர்கள், வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
நேற்று காலையில், 20க்கும் மேற்பட்டோரை, தெரு நாய்கள் கடித்து குதறின. தெரு நாய்கள் பிரச்னை குறித்து, சிக்கமகளூரு நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை; வெளியே அவர்கள் விளையாட முடிவதில்லை. கடந்த மூன்று நாட்களில் மட்டும், 35 பேரை நாய்கள் கடித்து குதறியுள்ளன.
சாலையில் நடமாடும்போது, கையில் கம்பு வைத்துக் கொண்டு நடமாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்தும்படி, நகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

