போராட்டக்காரர்களை தவறாக பேசாதீங்க: கட்சியினருக்கு மம்தா மருமகன் அபிஷேக் 'அட்வைஸ்'
போராட்டக்காரர்களை தவறாக பேசாதீங்க: கட்சியினருக்கு மம்தா மருமகன் அபிஷேக் 'அட்வைஸ்'
ADDED : செப் 03, 2024 07:45 AM

புதுடில்லி: 'போராட்டக்காரர்களை தவறாக பேச வேண்டாம்' என திரிணமுல் கட்சியினருக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், திரி்ணாமுல் காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை 9ம் தேதி கோல்கட்டாவின் ஆர்.ஜி.கார். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னைக்கு நீதி கேட்டு தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்களுக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கட்சியினருக்கு பறந்த உத்தரவு!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் பணிவாகவும், அனுதாபமாகவும் இருக்க வேண்டும். மருத்துவ சகோரத்துவம் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் யாரையும் தவறாகப் பேச வேண்டாம் என திரிணமுல் கட்சியில் உள்ள அனைவரையும் கேட்டு கொள்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. உங்கள் கருத்துகளை பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராட்டத்தை நிறுத்தக் கூடாது' என பதிவிட்டுள்ளார்.