காங்.,கின் இலவச வாக்குறுதிக்கு வாக்களிக்காதீர்கள் 'நமோ பிரிகேட்' சக்ரவர்த்தி சுலிபெலே அழைப்பு
காங்.,கின் இலவச வாக்குறுதிக்கு வாக்களிக்காதீர்கள் 'நமோ பிரிகேட்' சக்ரவர்த்தி சுலிபெலே அழைப்பு
ADDED : பிப் 18, 2024 02:40 AM

தாவணகெரே : ''காங்கிரசின் இலவச வாக்குறுதித் திட்டங்களுக்கு வாக்களிக்காதீர்கள். நாட்டின் நலன் கருதும் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள்,'' என, 'நமோ பிரிகேட்' நிறுவன தலைவர் சக்ரவர்த்தி சுலிபெலே வலியுறுத்தினார்.
தாவணகெரே சன்னகிரியில் 'நமோ பிரிகேட்' சார்பில் 'நமோ பாரத்' மாநாடு நடந்தது. இதில், சக்ரவர்த்தி சுலிபெலே பேசியதாவது:
மாநில காங்கிரஸ் அரசு வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, அரசு பணத்தை செலவழிப்பதால், மாநில வளர்ச்சி 15 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது.
ராகுல் தன் குடும்ப பெயரை பயன்படுத்தி, தன்னை பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்தி வருகிறார். ஆனால் நரேந்திர மோடி, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.
ஏழைகளின் இன்பம், துன்பங்களை மிக நெருக்கமாக அறிந்தவர். நான்கு முறை குஜராத் முதல்வாரகவும், இரண்டு முறை நாட்டின் பிரதமராகவும் அனைத்து தரப்பு மக்களையும் வசதியாக வாழ வைத்தவர்.
காங்கிரசின் இலவச வாக்குறுதித் திட்டங்களுக்கு வாக்களிக்காதீர்கள். நாட்டின் நலன் கருதும் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள்.
புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியாக, வான்வழி தாக்குதல் நடத்தி, 200க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மோடி கொன்றார்.
நாட்டின் கிரீடமாக விளங்கும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இலவச வாய்ப்புகளை வழங்கிய பெருமை மோடியை சேரும்.
கொரோனாவின்போது, நம் நாட்டின் 80 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக தானியங்களை வினியோகித்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச தடுப்பூசி போட வழி செய்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.