ADDED : நவ 22, 2024 07:17 AM
தொட்டபல்லாபூர்: பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூர் கும்மனஹள்ளியை சேர்ந்தவர்கள், சுரேஷ், ரூபா, 29. இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இரு வீட்டார் ஒப்பந்தத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கான செலவை கணவர் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். பல லட்சம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தப்பட்டது. ரூபா குடும்பத்தினர், சீதனமாக, 100 கிராம் தங்கம் கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்த பின், பிரச்னை தலை துாக்கியது. திருமண செலவு ரூபாயை தரும்படி கணவரும், மாமனார், மாமியாரும் துன்புறுத்தினர். இதனால், தன் நிலைமையை பெற்றோரிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவர்கள் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் மனமுடைந்த ரூபா, நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன், தற்கொலைக்கான காரணத்தை, கடிதமாக எழுதியுள்ளார். கடிதத்தில், 'என் தற்கொலைக்கு காரணம், கணவர் சுரேஷ், மாமனார் நரசிம்மமூர்த்தி, மாமியார் தேவம்மா ஆகியோர் தான்' என குறிப்பிட்டுள்ளார்.
தொட்டபெலவங்களா போலீசார் விசாரணையில், வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், சுரேஷை கைது செய்தனர். அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.