'விபி - ஜி ராம் ஜி' சட்டத்துக்கான வரைவு விதிகள் வெளியீடு
'விபி - ஜி ராம் ஜி' சட்டத்துக்கான வரைவு விதிகள் வெளியீடு
UPDATED : மே 23, 2026 10:20 PM
ADDED : மே 23, 2026 10:13 PM

புதுடில்லி:நுாறு நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக, 'விபி - ஜி ராம் ஜி' திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையொட்டி இச்சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வரைவு விதிகளை கருத்து கேட்புக்காக மத்திய அரசு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக 'விபி - ஜி ராம் ஜி' என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 'விபி - ஜி ராம் ஜி' சட்டம், 2025 நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி பிரிவு 33 மற்றும் அது தொடர்பான ஷரத்துகள் கட்டமைக்கப்பட்டு, அதற்கான வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், வல்லுநர்களின் ஆலோசனைக்காக இந்த வரைவு விதிகளை மத்திய அரசு பொதுவெளியில் நேற்று வெளியிட்டது.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட இந்த வரைவு முன்மொழிவுகளில் திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வழிகாட்டுதல் மற்றும் மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவு கவுன்சில் ஆகியவற்றை அமைப்பதற்கான விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்கான ஊதிய பட்டுவாடா முறை, வேலை வழங்காதபட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய வேலையின்மைபடி குறித்த நெறிமுறைகள் இடம் பெற்றுள்ளன.
நிர்வாக செலவுகள், பொதுமக்கள் குறைதீர் கட்டமைப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மேலாண்மை விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் படிப்படியாக மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய 'விபி - ஜி ராம் ஜி' திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும். மாநில அரசுகள் தங்களின் புதிய திட்டங்களை அறிவிக்கும் இடைப்பட்ட மாற்றுக் காலத்தில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த வரைவு விதிகள் உறுதி செய்யும்.
மேலும், பழைய திட்டத்தின் கீழ் 'இ.-கே.ஒய்.சி.,' எனப்படும், அடையாளம் சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்ட தொழிலாளர்களின் வேலை அட்டைகள் புதிய திட்டத்திலும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுகள், பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரைவு விதிகளைப் பரிசீலித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அரசுக்கு கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
