ரூ.75 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரிய பெண்கள் இருவர் கைது
ரூ.75 கோடி போதைப்பொருள் கடத்தல்: பெங்களூருவில் நைஜீரிய பெண்கள் இருவர் கைது
ADDED : மார் 16, 2025 06:11 PM

மங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ போதை கடத்தல் தொடர்பாக நைஜீரிய பெண்கள் இருவரை கர்நாடக போலீஸ் கைது செய்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக பெங்களூரு மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில், போதை பொருட்கள் கடத்தல் அதிகரித்து வருவது பெரும் சவாலாக உள்ளது.
இத்தகைய போதை வலையமைப்புகளை தடுக்க, உளவுத்துறை மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சந்தேக நபர்களை கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் நைஜீரிய பெண்கள் கைதாகி உள்ளனர்.
கைது குறித்து மங்களூரு போலீஸ் அதிகாரி அனுபம் அகர்வால் கூறியதாவது:
கைதானவர்கள் பம்பா பான்டா 31, மற்றும் அபிகெய்ல் அடோனிஸ் 30 என்றும் இருவரும் டில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூருக்கு வந்த நிலையில் பிடிபட்டனர்.
அவர்கள் தள்ளுவண்டிகளில் பைகளை இழுத்து வந்தனர். அவர்கள் மீது சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் 37 கிலோ போதைப் பொருளுடன், 4 மொபைல் போன்கள், பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18,000 இருந்தது. அவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.
இவர்கள் இருவரும் டில்லியில் வசிக்கிறார்கள். இங்கிருந்து நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல் வேலைகளை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விமானங்கள் மூலம் போதைப்பொருட்களை மும்பைக்கு 37 முறையும் 22 முறை பெங்களூருக்கும் கொண்டு சென்று வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவர்களில் பான்டா 2020லும் அடோனிஸ் 2016 முதலும் தொழில்முறை விசாவில் இந்தியாவில் தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக போதைப்பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்துள்ளது. இருவரிடம் மேலும் விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு அனுபம் அகர்வால் கூறினார்.