ADDED : பிப் 09, 2026 01:15 AM

பெங்களூரு: பெங்களூரில், மது போதையில் இருந்த இரண்டு இளம்பெண்கள், நடுரோட்டில் டாக்சி ஓட்டுநரை தாக்கியதால், கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு ஹுலிமாவு பகுதி பன்னரகட்டா சாலையில் நேற்று முன்தினம் இரவு, இரண்டு இளம் பெண்கள், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த டாக்சி மீது, இரு சக்கர வாகனம் மோதியது.
இதனால், டாக்சி ஓட்டுநர் கோபத்துடன் கீழே இறங்கி வந்தார். அவரை, ஆபாச வார்த்தைகளால் இரு பெண்களும் திட்டினர். இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார்; 'பேசி தீர்த்து கொள்ளலாம்' என்றார்.
ஆத்திரம் அடங்காத பெண்கள், கையில் வைத்திருந்த சிறிய இரும்பு செயினால் அவரைத் தாக்கினர். மேலும், ஹெல்மெட்டை வைத்தும் தாறுமாறாக அடித்தனர். இதை பார்த்த சக வாகன ஓட்டிகள், அப்பெண்களை சமாதானம் செய்ய முயன்றனர். அப்பெண்கள், சமாதானம் செய்ய வந்தவர்களையும் தாறுமாறாக உதைத்தனர்.
அப்போது தான், இரண்டு பெண்களும் மது போதையில் இருப்பது தெரிந்தது. இதை பலரும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ பதிவு செய்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு பெண்களையும், போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது, அவர்கள் போலீசாரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாக்சி ஓட்டுநர் அகமது, ஹுலிமாவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், குடிபோதையில் இருந்த இரு பெண்களும் வடமாநிலத்தைச் சேர்ந்த லிசா, மேத்யூ என தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

