தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ டில்லியை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்

டில்லியை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்

டில்லியை புரட்டிப்போட்ட புழுதிப்புயல்


ADDED : மே 15, 2025 07:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2025 07:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷாஹதரா:தேசிய தலைநகர் டில்லியை நேற்று முன்தினம் இரவு முழுதும் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் இருந்து புழுதிப்புயல் நம் நாட்டின் வடக்கு மாநிலங்களை நேற்று தாக்கியது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை கடந்து நேற்று முன் தினம் இரவு முழுதும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை புரட்டிப் போட்டது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, புழுதிப்புயல் வீசியபோது, காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ., ஆக இருந்தது. இரவு முழுதும் வீசிய புழுதிப்புயலால் நேற்று காலையில் இருந்தே காற்றின் தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.

தேசிய தலைநகர் பிராந்தியம் முழுதுமே புழுதி சூழ்ந்திருந்தது. இந்த புழுதிப் புயலின் தாக்கத்தால் நேற்று காலையில் 1,200 மீட்டருக்கு அப்பால் இருப்பதை பார்க்க முடியவில்லை.

இந்த புயல் படிப்படியாக நகர்ந்து மாலையில் நகரத்தை விட்டு கிழக்கு நோக்கி கடந்து சென்றது. அதன் பின் 4,000 மீட்டர் வரையில் பார்க்க முடியும் அளவுக்கு காற்று தெளிவானது. எனினும் புழுதியின் தாக்கம் நீடித்தது.

காற்றின் தரத்தை கண்காணிக்க தேசிய தலைநகரில் நிறுவப்பட்டுள்ள 13 மையங்களிலும் காற்று மோசமான நிலையில் இருப்பதாக பதிவானது.

புழுதிப்புயல் கடந்து சென்ற பின் காற்று மணிக்கு 3 முதல் 7 கி.மீ., வேகத்தில் வீசியது.

புழுதிப் புயலால் மனித உடலில் நீண்டகால பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இந்த துகள்கள் நுரையீரலில் ஆழமாகப் படிந்து, நுரையீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று லோக் நாயக் மருத்துவமனை டாக்டர் தெரிவித்தார்.

வெளியே நடமாடும்போது, முகக்கவசம் அணியும்படியும் சுவாச நோய் உள்ளவர்களும் முதியோரும் குழந்தைகளும் வெளியே நடமாடுவதை தவிர்க்கும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசியல் மோதலை ஏற்படுத்திய புயல்


டில்லியில் நேற்று முன் தினம் இரவு முதல் வீசிய புழுதிப்புயல், ஆளும் பா.ஜ., ஆம் ஆத்மி கட்சியிடையே அரசியல் மோதலை கிளப்பிவிட்டுச் சென்றுள்ளது.
இந்த புழுதிப்புயல் குறித்து தன் 'எக்ஸ்' பக்கத்தில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'ஆம் ஆத்மி ஆட்சிக்காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை' என பதிவிட்டுள்ளார்.
இதேபோன்ற தாக்குதலை அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஆதிஷியும் தொடுத்துள்ளார். தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் அவர், 'நகரில் மே மாதத்தில் காற்றின் தரம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. டில்லியின் மோசமான காற்று மாசுபாட்டிற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா பொறுப்பேற்பாரா?' என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
இதற்கு 'எக்ஸ்' பக்கத்தில் மஞ்சிந்தர் சிங் சிர்சா வெளியிட்ட பதிவில், 'முன்னாள் முதல்வர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இயற்கையை பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. காற்று மோசமான நிலையை அடைந்ததற்கு வானிலை நிகழ்வுதான் காரணம்; தவறான நிர்வாகம் அல்ல. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின்போது முக்கிய பிரச்னைகளை ஆம் ஆத்மி புறக்கணித்தது. தவறான நிர்வாகத்தைப் பற்றி பேசலாம் ஆதிஷி' என பதிலடி கொடுத்துள்ளார்.
மூத்த ஆம் ஆத்மி தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, காற்றின் தரக் குறியீடு 500ஐ எட்டியதாகக் கூறி, காற்றின் தர புள்ளிவிபரத்தின் மொபைல் போன் ஸ்கிரீன்ஷாட்டை 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்து, 'பா.ஜ., அரசாங்கத்தின் நான்கு இயந்திரங்களும் டில்லியில் புகையை வெளியிடுகின்றன.
டில்லியில் காற்றின் தரக் குறியீடு தற்போது 500ஆக உள்ளது. அதாவது விஷம்! சூரிய ஒளி தெரியவில்லை, சுவாசிக்க முடியவில்லை, கண்கள் எரிகின்றன, தொண்டை வலிக்கிறது. திட்டமிடல் இல்லை, அவசரகாலத் திட்டம் இல்லை. வெறும் பேச்சுகளும் கோஷங்களும் மட்டுமே உள்ளன' என பதிவிட்டுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us