ADDED : ஜூலை 11, 2025 12:17 AM
புதுடில்லி: ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டில்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று காலை 9:04 மணி அளவில் ரிக்டர் 4.4 அளவிலும், 10 கி.மீ., ஆழத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதி, டில்லியின் மேற்கில் இருந்து 51 கி.மீ., தொலைவில் உள்ளது.
ஜஜ்ஜாரில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஹரியானாவின் பிற மாவட்டங்களான ரோஹ்தக், குருகிராம், பானிபட், ஹிசாரிலும் உணரப்பட்டது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
சில இடங்களில் கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் பீதி அடைந்தனர்.