வெளிநாடு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் ரூ.58,000 கோடி கடன் பாக்கி
வெளிநாடு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் ரூ.58,000 கோடி கடன் பாக்கி
ADDED : டிச 02, 2025 04:16 AM

புதுடில்லி: 'வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, அவற்றை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளிகள் மீது, 58,000 கோடி ரூபாய் கடன்தொகை நிலுவையில் உள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் நம் நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளிகள் செலுத்த வேண்டிய கடன்தொகை குறித்த விபரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, சந்தேசரா உட்பட, 15 தொழிலதிபர்கள் உள்ளனர். இவர்கள் நடத்திய பணமோசடி தொடர்பாக, இதுவரை 53 வழக்குகள் பதிவு செ ய்யப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள இருவர், கடன் வழங்கிய வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி உரிய தீர்வு கண்டனர். மீதமுள்ளவர்கள் மீதான கடன் நிலுவைத்தொகை, 58,000 கோடி ரூபாய்.
இதில், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வங்கிகள் வாயிலாக 19,187 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகளில் இருந்து விஜய் மல்லையா, 22,065 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதில், அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் வாயிலாக, 14,000 கோடி ரூபா ய் மீட்கப்பட்டுள்ளது.
நிரவ் மோடி, 9,656 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், 545 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இரு வங்கிகளில் இருந்த நிலுவைத் தொகையான, 496 கோடி ரூபாயை, தொழிலதிபர்கள் நிதின் மற்றும் சேதன் சந்தேசரா சகோதரர்கள் திரும்ப செலுத்தியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

