தர்மஸ்தலா வழக்கில் ஈ.டி., 'என்ட்ரி': வெளிநாட்டு பணம் பற்றி விசாரணை
தர்மஸ்தலா வழக்கில் ஈ.டி., 'என்ட்ரி': வெளிநாட்டு பணம் பற்றி விசாரணை
ADDED : செப் 03, 2025 12:29 AM

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறையும் களத்தில் குதித்துள்ளது. தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு, வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, விசாரணையை துவக்கி உள்ளது.
கர்நாடகாவின் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த, மஞ்சுநாதா கோவில் முன்னாள் ஊழியர் சின்னையா கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், பெங்களூரில் வசிக்கும் பல்லாரியை சேர்ந்த, 'யு - டியூபர்' சமீர் தன் யு - டியூப் பக்கத்தில், தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரையில் பெண்களின் உடல்கள் கிடப்பது போன்று, ஏ.ஐ., தொழில்நுட்ப புகைப்படத்தை வெளியிட்டார்.
எஸ்.டி.பி.ஐ., அமைப்பும், தர்மஸ்தலா வழக்கில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தியது.
அமித் ஷாவுக்கு கடிதம் நேத்ராவதி ஆற்றங்கரையில், 17 இடங்களில் தோண்டியும் எலும்பு கூடுகள் எதுவும் கிடைக்காத நிலையில், தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பப்படுவதாக பா.ஜ., பொங்கி எழுந்தது.
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, 'தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவோருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது பற்றி, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினார்.
வங்கிகளுக்கு பணம் இதையடுத்து, தர்மஸ்தலா வழக்கில் அமலாக்கத் துறையும் களத்தில் குதித்தது.
மைசூரின் ஒடநாடி, சம்வாட் ஆகிய இரு தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த பணம், அந்த பணம் என்ன காரணத்திற்காக வந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கும்படி, சில வங்கிகளுக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதி உள்ளது.
இந்த தொண்டு நிறுவனங்கள் மூலம், தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பியோருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், தொண்டு நிறுவனங்களின் பண பரிவர்த்தனை விபரங்களை வங்கிகளிடம் கேட்டுள்ளது.
சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தால், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கும்.