ADDED : மார் 16, 2026 02:17 AM

மூணாறு: இடுக்கியில் சம்பள பிரச்னையில் தோட்ட உரிமையாளரின் கார், வீட்டு கதவுக்கு தீ வைத்து, உடலில் போலி வெடி குண்டுகளை கட்டி ரகளை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் மறையூர் நாச்சிவயலை சேர்ந்தவர் ஜோணி 64. இவர் மறையூர் பத்தடிபாலம் பகுதியை சேர்ந்த சஜீவ் தோட்டத்தில் பணிபுரிந்தார். சஜீவ், ஜோணிக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சஜீவ் குடும்பத்துடன் உறவினரின் துக்க நிகழ்விற்கு தொடுபுழா சென்றார்.
அப்போது சஜீவ் வீட்டிற்கு சென்ற ஜோணி, சம்பளம் வழங்காத ஆத்திரத்தில் கார், வீட்டு கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். வீட்டருகில் உள்ள மரத்தில் துாக்கிட முயன்றார். ஜோணியின் உடலில் வெடிகுண்டு போன்ற பொருள் கட்டப்பட்டிருந்தது. அவ்வழியாக சென்றவர்கள் போலீசிற்கு தகவல் அளித்தனர்.
போலீசார் அவரிடம் பேசி மரத்தில் இருந்து கீழே இறக்கினர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஜோணி உடலில் கட்டப்பட்டிருந்த பொருளை சோதனை செய்தனர். அது போலி வெடிகுண்டு என தெரிந்தது. ஜோணியை மறையூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

