ADDED : செப் 20, 2024 12:45 AM

ஸ்ரீநகர்: ''ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் மீது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது. அவர்கள் அளிக்கும் ஓட்டு மாற்றத்தை கொண்டு வரும் என்பதை உணர்கின்றனர். இது அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான முதல் படி,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பா.ஜ., அரசு நிறைவேற்றும்.
ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. மோடி ஆட்சியில் அவர்கள் அதிகாரம் பெறுவர். இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்காக, மாநில பா.ஜ., பல அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சுயநலம்
காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காக ஜனநாயகத்தையும், காஷ்மீரையும் சீரழித்துவிட்டன.
அவர்கள், 1980களில் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஜம்மு - காஷ்மீரை தங்கள் சொந்த ராஜ்ஜியமாக கருதினர். அவர்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முன்னேற முடியாமல் செய்தனர். இல்லையெனில், பஞ்சாயத்து மற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களை அவர்கள் ஏன் தடுத்து நிறுத்தினர்?
அப்படி நடத்தினால் பல புதிய முகங்கள் களத்தில் இறங்குவர். அது அவர்களின் குடும்பத்துக்கு சவாலாக அமையும். இந்த சுயநலத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டது.
மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தனர். தேர்தலில் ஓட்டளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த மூன்று குடும்பங்கள் தான் ஆட்சிக்கு வரும் என்பதை உணர்ந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை பெருமளவில் மாறியுள்ளது. ஜனநாயக செயல்பாட்டில் இளைஞர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.
முன்பெல்லாம் தேர்தல் நடத்தப்பட்ட நிலைமையை நினைத்துப் பாருங்கள். பிரசாரங்கள் மாலை 6:00 மணியுடன் நிறுத்தப்படும். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய முடியாது. அந்த மூன்று குடும்பங்களும் இதனால் மகிழ்ச்சியாக இருந்தன.
ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டன. இரவிலும் பிரசாரம் நடக்கின்றன. மக்கள் ஜனநாயகத்தை கொண்டாடுகின்றனர்.
ஜனநாயகத்தின் மீது இளைஞர்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது. இது மாற்றத்தை கொண்டு வரும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கை தான் அதிகாரமளிப்பதற்கான முதல் படி.
இவ்வாறு அவர் பேசினார்.
திட்டமிட்ட சதி
இதை தொடர்ந்து, ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவோ தேவி கோவிலின் அடிவாரத்தில் உள்ள கத்ராவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''ஹிந்து கடவுள்களை காங்கிரஸ் தலைவர்கள் அவதுாறாக பேசுவது திட்டமிட்ட சதி.
''அவர்கள் நக்சல் மனநிலை உடையவர்கள். அதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?'' என, மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.