ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : மார் 27, 2024 11:50 AM

புதுடில்லி: ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் தீபக் சிங்லாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
டில்லியில், மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், சமீபத்தில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை கைது செய்தது. இவரை, 28ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், முதல்வராக, அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்வார் என, ஆம் ஆத்மி அறிவித்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் தீபக் சிங்லாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சிங்லா, டில்லியின் விஸ்வாஸ் நகர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைதான நிலையில் மேலும் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் ஆம்ஆத்மியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

