ADDED : ஜன 01, 2024 06:28 AM
தார்வாட்: தார்வாடின் ஓம்கார நகரில் வசித்தவர் கிரிஜா நடூரமடா, 60. இவர் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். குழந்தைகளும் இல்லாததால், தனியாக வசித்தார். ஆசிரியர் பணியுடன், பல ஆண்டுகளாக வட்டி தொழிலும் நடத்தினார்.
இந்நிலையில் டிசம்பர் 23ல், இவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை கவனித்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தார். எட்டு நாட்களுக்கு பின், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பரிசோதனையில் இவர் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, தார்வாடின் அமரகோளா கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் தன்டினா என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கிரிஜாவிடம் மஞ்சுநாத், 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். வட்டி கட்டாததால், பணத்தை வட்டியுடன் திருப்பி தரும்படி கிரிஜா நச்சரித்தார். ஆனால் மஞ்சுநாத்திடம் பணம் இல்லை. தன் நிலையை விவரித்தும், பணம் கேட்டு தொந்தரவு கொடுத்தார். இதனால் கோபமடைந்து, இவரை கொலை செய்ய மஞ்சுநாத் முடிவு செய்தார்.
டிசம்பர் 15ல், கிரிஜாவின் வீட்டுக்கு சென்றார். குடிக்க தண்ணீர் தரும்படி கேட்டார். தண்ணீர் கொண்டு வர, உள்ளே சென்ற அவரை பின் தொடர்ந்து, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதை மஞ்சுநாத் ஒப்புக்கொண்டார்.
சொந்தம், பந்தம் இல்லாமல் தனியாக இருந்த கிரிஜா, இருக்கும் பணத்தை வைத்து, நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். வட்டிக்கு ஆசைப்பட்டு கொலையானார் என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.