அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஜன 21, 2026 03:55 PM

புதுடில்லி: மத்திய அமைச்சரவை, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மார்ச் 31, 2031 வரை தொடர இன்று ஒப்புதல் அளித்தது.
அடல் பென்ஷன் யோஜனா (ஏபிஓய்) திட்டமானது, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.
இந்த திட்டத்தில் சந்தாதாரரின் பங்களிப்பைப் பொறுத்து, 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.ஜனவரி 19, ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 8.66 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜனவரி21)பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை 2030-31 நிதி ஆண்டு வரை தொடர ஒப்புதல் அளித்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்கான விளம்பர நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து நிதியுதவி வழங்கும்.2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'வளர்ச்சியடைந்த பாரதம்' ஆக்கும் இலக்கின் ஒரு பகுதியாக, குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு ஓய்வூதியப் பாதுகாப்பை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

