ADDED : பிப் 02, 2024 05:07 AM

புதுடில்லி: திறனுள்ள இளைஞர்கள் சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும், புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளுடன் துவக்கப்படும் நிறுவனங்களே, 'ஸ்டார்ட்அப்' என்றழைக்கப்படுகின்றன.
நாட்டில் தற்போது, 1.17 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு வரிச் சலுகை உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் துறையினரை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை, அடுத்தாண்டு மார்ச், 31ம் தேதி வரை நீட்டிப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, அரசின் முதலீட்டு நிதி மற்றும் பென்ஷன் திட்டங்கள் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., எனப்படும் சர்வதேச நிதி சேவை மையங்களுக்கான வரிச் சலுகைகளும், அடுத்தாண்டு மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
''இது இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் அறிவிப்புகளை வெளியிட முடியாது. அதே நேரத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான வரி விடுமுறை காலத்தை நீட்டித்துள்ளது உள்ளிட்டவை வரவேற்கக் கூடியவை,'' என, பிரபல முதலீட்டு ஆலோசகர் கவுரி பூரி கூறியுள்ளார்.

