ரூ.50 கோடி நாய் என பொய் தகவல்: அமலாக்க துறை ரெய்டில் அம்பலம்
ரூ.50 கோடி நாய் என பொய் தகவல்: அமலாக்க துறை ரெய்டில் அம்பலம்
ADDED : ஏப் 18, 2025 05:32 AM

பெங்களூரு : பெங்களூரில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நாய் வைத்துள்ளதாக, 'அளந்து' விட்டவர் வீட்டில், அமலாக்கத் துறையினர் அதிரடி 'ரெய்டு' நடத்தினர். இதில், அந்த நாய், 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது என்பது தெரியவந்தது. பொய் தகவல் கொடுத்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ், 51. தன்னை, 'இந்திய நாய்கள் இனவிருத்தி சங்க தலைவர்' என கூறி கொள்கிறார். தன்னிடம், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஓநாய் - காசஷியன் ஷெப்பர்டு கலப்பு இன நாய் உள்ளதாக கடந்தாண்டு சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
இந்த வீடியோவால் ஒரே நாளில், நாடு முழுதும் அவரது பெயரும், நாயின் படமும் பிரபலமானது. இதை பயன்படுத்தி நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு இந்நாயை கொண்டு வருமாறு அழைப்புகள் வந்தன. இதையடுத்து, 30 நிமிடம் நிகழ்ச்சிக்கு 2.46 லட்சம் ரூபாயும்; அதற்கு மேல் நடக்கும் நிகழ்ச்சிக்கு 10 லட்சம் ரூபாயும் கட்டணம் வசூலித்து வந்தார்.
அத்துடன், தன் 9 ஏக்கர் பங்களாவில், விலை உயர்ந்த நாய்களை கண்காணிக்க, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதாகவும், வீட்டை சுற்றிலும் 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளதாகவும் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமலாக்கத் துறையினர் நேற்று காலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 50 கோடி ரூபாய் கொடுத்து, இந்த நாயை வாங்கியதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
ஒருவேளை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளாரா என்று அவரிடம் விசாரித்த போது, '50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கியதாக கூறியது பொய்' என கூறியுள்ளார். மேலும், 'இந்த நாய் தன்னுடையது அல்ல; பக்கத்து வீட்டைச் சேர்ந்தது. இது வெளிநாட்டு நாயல்ல; இந்திய நாய் தான். இதன் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவானது' என்றும் தெரிவித்து உள்ளார்.
இதனால், கடுப்பான அமலாக்கத் துறை அதிகாரிகள், பொய் தகவல் பரப்பியது தொடர்பாக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர்.

