ADDED : பிப் 14, 2024 12:28 AM

சுல்தான்பூர்:உத்தர பிரதேசத்தில், பிரபல பாலிவுட் சினிமா பாடகி விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத், 35, அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உ.பி., மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் சீதகுண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத். பிரபல பாலிவுட் சினிமா பாடகி. சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
நேற்று காலை, அவரது படுக்கை அறை மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து, மல்லிகாவின் தாய் சுமித்ரா சிங் கூறுகையில், ''இந்த சம்பவம் எப்போது நடந்தது என தெரியவில்லை. காலையில் அவர் அறைக்கு சென்ற போதுதான் துாக்கில் தொங்கிய நிலையில் பார்த்தோம். போலீசார் விசாரிக்கின்றனர்,'' என்றார்.
கோட்வாலி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம் பாண்டே, ''தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றுதான் சந்தேகிக்கிறோம். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தால்தான் உறுதியாக சொல்ல முடியும். போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்,'' என்றார்.
இந்த சம்பவம் உ.பி., மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

