ADDED : ஜன 20, 2025 01:47 AM

காங்கர் : சத்தீஸ்கரில் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க சென்ற தந்தை மற்றும் மகன் கரடி தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தின் தோங்கர்கட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் தாரோ, அவரது மகன் சுக்லால் தாரோ, 45, பேரன் அஜு குரேதி, 22, ஆகியோர் இணைந்து அக்கிராமத்தை ஒட்டியுள்ள கோரர் வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்க நேற்று முன்தினம் சென்றனர்.
அப்போது வனப்பகுதிக்குள் உலவிய கரடி மூவரையும் தாக்கியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, வனப்பகுதி அருகே இருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, கரடியால் தாக்கப்பட்டு இறந்து கிடந்த சுக்லால் தாரோவின் உடலை வனத்துறையினர் மீட்டனர். இதேபோல் படுகாயங்களுடன் இருந்த அஜுவை மீட்டனர்.
இதற்கிடையே, அப்பகுதிக்குள் நுழைந்த கரடி மீண்டும் தாக்க துவங்கியது. இதில், சுக்லாலின் தந்தை சங்கர் தாரோவும் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல், வனப்பகுதிக்குள் கிராம மக்கள் செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.